நெடுநேரம்
கடலில் விளையாடிய சிறுவன்
கடலை வீட்டிற்கு கொண்டு செல்ல விரும்பினான்
பிளாஸ்டிக்காகிதத்தில்
கொஞ்சம் அடைத்துக் கொண்டு போனான்
அலையும்
ஒசையும்
மணலும்
நீலமும்
விகாசிப்புமற்ற
அந்தக்கடலில்
உப்பு மட்டும்
இருந்தது
வெறும்
உப்பு மட்டும்
---
வேடன்
கவை நிறைய அம்பிருந்தும் ஏதொன்றையும் பிரயோகிக்க மனம் கூசும் வேடனொருவன் அம்பினும் கூரிய பசி பாய்ந்து உழன்ற போது செம்பூத்துப் பறவை ஒன்றை பார்த்தான்.பகலெல்லாம் அவன் விரட்டிய போதும் கிளை கிளையாய்த் தாவி மறைந்த அதனை தேடியவாறு காடெங்கும் அலைந்தான். வெறுங்காற்றில் புரண்டு படுக்க சரசரக்கும் சருகுகளுக்கிடையே தாழம்பூ வாசம் மிளிர நெளியும் நச்சரவங்கள் நிறைந்த மூங்கில் காட்டுக்குள் அவன் நுழைந்த போது வானில் முழுநிலவு வந்துவிட்டிருந்தது. அவன் விரட்டிய அப்பறவை நிலவில் அமர்ந்திருக்க கண்டவன் தன் வில்லில் நாணேற்றி ஒரு அம்பை எய்து விட்டு காத்திருக்கத் துவங்கினான். அந்த அம்போ அவனை ஏமாற்றிவிட்டு வெளியின் திக்கற்றத் திக்கில் பறந்து கொண்டிருக்கிறது ஒரு செம்பூத்தே போலும்.
அருமை
ReplyDelete